Thursday, August 24, 2006

கல்விக்குக் குறைந்த நிதி!


மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான குழு பரிந்துரைத்த "கல்வி உரிமை வரைவு மசோதாவை'ச் சட்டமாக்கி அமல்படுத்தினால் கூடுதல் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் சட்டமியற்றி நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் 86-வது அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்வி உரிமையை மறுத்து இந்த நாட்டின் கோடானு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 10 சதவீதமாகவும், மாநில அரசின் ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் உயர வேண்டுமெனத் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கைகளின் நியாயங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளப்படாமலே உள்ளன.

ராணுவச் செலவுக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் 15 சதவீதத்திற்கும் மேல் பணம் ஒதுக்கித் தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம், எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.

இதனால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இதிலும் பள்ளிப்படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.

1951-ல் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கேற்ப கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப்பள்ளிகளாவது இந்தியாவில் தற்பொழுது இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதன் எண்ணிக்கை 2005-ல் சுமார் 5,81,000 மட்டுமே.
விளைவு, தற்பொழுது நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை (கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அல்ல) 65 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.

"கல்வி பற்றிப் பேசும்பொழுது ஒரு சமுதாயத்தின் முழு கட்டமைப்பைப் பற்றியும் அதன் முழுத்திட்ட அமைப்புகளைப் பற்றியும் பேசுகிறோம்' என்ற லத்தீன் அமெரிக்க சிந்தனையாளரான பவுலோ ஃபிரைடேவின் வார்த்தைகளில் உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொண்டால்தான் இளந்தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு என்ற பார்வை நமக்கு வரும்.

இவையெல்லாம் உணரப்பட்டு கல்வியறிவு இல்லாத மக்களை நாட்டின் சுமைகளாகக் கருதி அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யாதவரை 9 சதவீத அல்லது 10 சதவீத வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கும்.

நன்றி- தினமணி.

Sunday, August 06, 2006

விலகாத காரிருள்!

உலக மக்கள் மறக்க முடியாத; மறக்கக் கூடாத நாள் ஆகஸ்ட் 6, 1945. அன்றைய தினம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது ஒரு கோடி சூரியன்கள் தோன்றியதாகத் தோற்றம் காட்டி 2 லட்சம் உயிர்களைக் குடித்த அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் பின்னர் அந் நகரில் இருளை உருவாக்கியது. அக் காரிருள் இன்று உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9ம் தேதி வீசப்பட்ட மற்றோர் அணுகுண்டுக்கு இதுவரை பலியானோர் 1.40 லட்சம். இக் குண்டு வெடிப்புகளில் உடல் தீப்பற்றி எரிந்து, நுரையீரல்கள் வெடித்து இறந்தவர்கள் மட்டுமன்றி கதிரியக்கத்தால் புற்றுநோய், மூளைக் கட்டிகள் ஏற்பட்டு தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலர் இறந்தனர்.
இறந்தவர்களைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு கதிரியக்கத்துடன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் சொல்லொணா துயரம் தாங்கினர். இத் துயரத்தைக் கண்ணுற்ற பிறகும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக்கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகும் உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவில் 10,104 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷியா - 16,000, இங்கிலாந்து - 200, பிரான்ஸ் - 350, சீனா - 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவை தவிர அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் நிலையில் உள்ள புளுட்டோனியம் அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளது. 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை. இதன் மூலம் வெளியிடப்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெகா டன் அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார்.
கார்பன் 14 என்ற கதிரியக்கப் பொருளை சுவாசிப்பதன் மூலம் ஏற்படும் புற்றுநோய், சாவுக்கு காரணமாக இருக்கும். இதன்படி அடுத்த சில நூறு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் 5 அணுஆயுத நாடுகள் நடத்திய வான்வெளி சோதனையின் வெடிப்புத் திறன் 545 மெகா டன். இந் நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றம் முழுமையான அணுவெடிப்புச் சோதனை தடை ஒப்பந்தத்துக்கு (CTBT) இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 1998ம் ஆண்டு அணுவெடிப்புச் சோதனை நடத்திய இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேயில்லை.

இப் பின்னணியில் தான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணுஆயுதங்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும் என சமாதான இயக்கங்களைச் சேர்ந்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இதே அளவு நிதியைத்தான் தொடக்கக் கல்விக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.
இந் நிலையில்தான், நிதிச்சுமையைக் காரணம் காட்டி, கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது; இப் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தும் வகையில் மாதிரி சட்ட முன்வடிவை சட்டமாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும்.
"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ, போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.'

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை (Neuclear Weapons Convention) "அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது' ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை "முற்றிலும் ஒழிப்பது' ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது குறித்த பலதரப்பு பேச்சுவார்தையை முடிவுக்கு கொண்டு வந்து உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது அவசர அவசியத் தேவையாகும்.

நன்றி- தினமணி


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். :)